31-Aug-2010 அன்று இட்லிவடை - வலைப் பூவில் இக்கட்டுரையை படித்தேன். அதை உங்களுக்காக இவ்விடத்தில்.....
=============================================
இக்கட்டுரையாசிரியரின் கூற்றுப்படி, தற்பெருமைக்கும் தன்னகந்தைக்கும் முன்பாக விநயத்தையும், படிப்பினையையும் உண்டாக்குவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை. ஆசிரியர் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்பொழுதும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கடைக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த உண்மைச் சம்பவம், தன்னைப் பற்றி உயர்வான அபிப்ராயம் உடைய எவரையும் விநயம் கொள்ளச் செய்யும். இக்கட்டுரையின் மூலம், இதனைப் படிப்பவர்களுக்கு பின்வரும் இரண்டு படிப்பினைகள் கிட்டக்கூடும்.
*எவற்றையும் கண்மூடித்தனமாக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
*எவற்றையுமே நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணிபுரியும் பத்திரிக்கையாளனான நான் பாரிஸ் ஹில்டன் முதல் ஓபரா வின்ஃப்ரே வரை ஏராளமான புகழ்பெற்ற மனிதர்களை பேட்டி காணும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கிறேன். ஆயினும், மயிலை கற்பகாம்பாள் கோயில் அருகில் இருக்கும் கலைவாணி என்ற பெண்ணை பேட்டி கண்ட அனுபவம் மிகவும் அலாதியானது. வாருங்கள் என்னுடன்!! இந்த அற்புதமான பெண்ணுடன் சில நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
செப்டெம்பர் 2008 இல், நானும் எனது மனைவி பத்மாவும் முடிந்தவரை மயிலையில் எங்களது நேரத்தை செலவிடுவது என முடிவு செய்து கொண்டோம். ஆகவே மயிலை கோவிலுக்கருகே ஒரு அபார்ட்மெண்டை எடுத்துக் கொண்டோம்.
ஒரு நாள் நாங்கள் சில வேத புஸ்தகங்களையும் , கேஸட்டுகளையும் வாங்கத் தீர்மானித்தோம். அவ்வாறுதான் கலைவாணியுடனான எங்களது சந்திப்பும் நிகழ்ந்தது.
வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் என்னுடைய ஞானம், சங்கரர் மற்றும் விவேகானந்தரின் ஆழ்ந்த கருத்துக்களில் பொதிந்துள்ள சாரத்தை மறுத்து தங்களின் பிறப்பின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து வாழும் மாட வீதி மானிடர்களை விடவே சற்று அதிகம். ஒரு சமயம், பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற ஒரு உபந்யாஸத்தில் கலந்து கொள்ள நேரிட்டது. அங்கே கோதா வெங்கடேச சாஸ்திரிகள் "தத்வ போதத்தின்" அழகை விவரித்துக் கொண்டிருந்தார். அதுவே ஆதி சங்கரரின் ஆச்சர்யம் மிகுந்த அருளிச்செயல்கள் மீது எனது மனத்திற்கு நாட்டத்தை ஏற்படுத்தியது. கோவிலில் தரிசனத்திற்குப் பின், "கிரி ட்ரேடிங் கம்பெனி"யினுள் வியாபித்து, தத்வ போதம் தொடர்பான புஸ்தகத்தைத் தேடத் துவங்கினேன்.
அங்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் பல்வேறு வகையான புத்தகங்களையும், சிடிக்களையும் வாங்குவதைக் கண்டோம். பஜன்கள் முதல் பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரிகள் வரை பல்வேறு சிடிக்களை அவர்கள் சேகரம் செய்ததைக் கண்டதும், நாங்கள் சரியான இடத்திற்கே வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தோம்...
நான் தத்வ போதத்தைத் தேடிக் கொண்டிருக்கையில், எனது மனைவி பாரதியார் பாடல்களையும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் கேஸட்டுகளையும் சேகரிப்பதில் மூழ்கியிருந்தாள். நான் இந்தப் புத்தகத்தை அநேகமாக எல்லா இடங்களிலும் தேடினேன்....
அங்குதான் அப்பெண் கலைவாணி நின்று கொண்டிருந்தாள் . காஷியருக்கு அருகே நின்று கொண்டு, எங்களது அனைத்து நடவடிக்கைகளையும் அமைதியாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். சற்றே அடர்ந்த கருமையான நிறம் கொண்டவள், அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம், 17 அல்லது 18 வயது நிரம்பிய பெண், அதிகபட்சமாக எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க முடியாது. வறுமையின் காரணமாக அவள் இங்கு வேலை செய்பவளாக இருக்கலாம்...என்னுடைய பத்திரிக்கையாள மூளை தேவையில்லாமல் இப்பெண்ணைப் பற்றிய கணக்கீடுகளில் மூழ்கியிருந்தது...அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாலும், நான் அவளை அலட்சியப்படுத்தி விட்டு, தத்வ போதத்தை தேடுவதில் கவனம் செலுத்தினேன்.
சந்த்யா வந்தனம் முதல் ஸ்வாமி விவேகானந்தரின் சிகாகோ உரை வரை பல புத்தகங்கள் என் கண்ணில் பட்டன. ஆனால் சுமார் 40 நிமிடங்களைச் செலவழித்த பிறகும் நான் தேடியது கிடைக்கவே இல்லை. நான் அவளைக் கவனித்தேன்...என்னையே மிகவும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்...
நான் அவளைக் கேட்டேன், அப்பேர்பட்ட பெண்ணிற்கு சாதாரணமாக எதுவுமே தெரிந்திருக்க முடியாது என்ற எண்ணத்தில், தத்வ போதத்தை விடுங்கள்.
"ஸார், நான் தங்களுக்கு உதவலாமா?"
"நான் தத்வ போதத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்"
"தேவநாகரியிலா அல்லது ஆங்கில மற்றும் தேவநாகரி மூலத்திலா?"
"கடவுளே, இவளுக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கலாம் போலும், தேவநாகரி மற்றும் ஆங்கில மூலத்தில்"
"சின்மயா மிஷன், ஹிந்து பப்ளிகேஷன்ஸ், ராமக்ருஷ்ண மடம் இவற்றில் எவற்றின் பதிப்பை வாங்க விரும்புகிறீர்கள்?"
"தெரியவில்லை.....அவ்வளவாக அது பற்றி எனக்கு அபிப்ராயமேதுமில்லை...அடிப்படையாக அதைக் கற்கவே விரும்புகிறேன்"
"நீங்கள் தமிழ் படிப்பீர்களா?"
"நான் தமிழந்தான்"
நான் பெரும்பாலும் எவ்வாறு பல இடங்களில் தமிழன் அல்லாதவன் போன்று நடித்திருக்கிறேன் என்பதை என்னுள்ளேயே எண்ணிக் கொண்டேன்)
"அப்படியானால் நீங்கள் இதையே எடுத்துக் கொள்ளலாம்.....என்று நான் எந்த இடத்தில் சற்றொப்ப அரை மணிநேரமாகத் தேடிக் கொண்டிருந்தேனோ அதே அடுக்கிலிருந்தே ஒரு புத்தகத்தை லாவகமாக உருவி என்னிடம் கொணர்ந்து கொடுத்தாள்.
இந்த புத்தகம் என். சிவராமன் என்பவரால் எழுதப்பட்டது, ஹிந்து பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. மிகவும் எளிமையானதும், கருத்தாழம் மிக்கதுவும் கூட. தேவநாகரி எழுத்துக்களிலும் கூடவே கொடுக்கப்பட்டுள்ளது இப்புத்தகத்தில் என விளக்கினாள்.
"அடக் கடவுளே, இவ்வளவு அறிவுக் கூர்மையுடைய இப்பெண்ணை நான் எதனால் குறைத்து மதிப்பிட்டேன்? நான் ஒரு என் ஆர் ஐ என்ற அகந்தையினாலா? அல்லது அவள் மிகவும் அப்பாவியாக, கருமையான நிறத்துடன் தோற்றமளித்ததாலா? அல்லது தனது ஏழ்மையினால் இப்பணியை ஏற்றிருக்கும் இப்பெண்ணிற்கு தத்வ போதம் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என்ற என்னுடைய அறியாமையினாலா?"
நான் என்னுடைய குணாதிசயத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென எண்ணிக் கொண்டேன். இவ்வளவு அற்புதமான பெண்ணிற்கு முன் நான் எவ்வளவு அடிமுட்டாளாக நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அத்தருணத்தில் உணர்ந்து கொண்டேன்.
"மேடம், நேற்றுவரை தத்வ போதத்தை யார் எழுதினார்கள் என்று கூடத் தெரியாமலிருந்தேன். தற்செயலாக தத்வ போதம் தொடர்பான ஒரு சொற்பொழிவை பாரதிய வித்யா பவனில் கேட்டதன் மூலம் ஏற்பட்ட உந்துதலினால்.....
"பாரதீய வித்யா பவனில், கோதா வெங்கடேஸ்வர சாஸ்திரியின் சொற்பொழிவில் கலந்து கொண்டீர்களா?"
"நான் மிகுந்த அதிர்ச்சியுடன், கடவுளே....அது உனக்கெப்படித் தெரியும்? "
"வழக்கமாக இவர்தான் இது தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றுவார். தவிர இந்நகரிலேயே இவர்தான் சிறந்த முறையில் தத்வ போத சொற்பொழிவாற்றுபவர்" என்றாள்.
"ஆமாம்! விவேகானந்தர், ராமக்ருஷ்ணர் மற்றும் தத்வ போதம் தொடர்பாக நிறைய படித்திருக்கிறேன். தவிர, தற்செயலாக தத்வ போதம்தான் எனக்கு மிகுந்த விருப்பமானதுவும் கூட."
"நீ தத்வ போதம் படித்திருக்கிறாயா?"
"நான் என்.சிவராமன் எழுதிய இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன். நீங்கள் ஒருமுறை இப்புத்தகத்தைப் படிக்கத் துவங்கினால் கீழே வைக்கவே மனம் வராது" என்றாள்.
"ஏன்? அப்படி என்ன இப்புத்தகத்தில் சிறப்பு?"
"சார், நீங்கள் ஏதோ தத்வ போதம் பற்றித் தெரியாதவர் போல் என்னிடம் கேலி செய்கிறீர்கள்"
"இல்லை நிஜமாகவே தெரியாது என எனது அறியாமையை ஒப்புக் கொண்டேன்"
"எனது மனைவி தான் சேகரித்த சிடி தொகுப்புகளைப் பற்றிய பெருமிதத்துடன், ஒரு மூலையிலிருந்து எங்களுடைய சம்பாஷனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்."
"சார், என்னைப் பொருத்தவரை இப்புத்தகம் மொத்த வேதத்தின் சாராம்சத்தையும் அப்படியே தருகிறது. ஒருவர் தன்னிடமுள்ள அகங்காரம் அத்தனையும் விட்டொழித்துவிட்டு மிகுந்த விநயமுடையவராகி விடுவார்."
"உண்மையாகவே வெறுமனே இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அப்படியான விநயமுடையவர்களாகி விடுவார்களா?"
"இந்த எழுத்துக்களை மிகுந்த அற்பணிப்புணர்வுடனும், ஈடுபாட்டுடன் படிப்பவர்கள் கண்டிப்பாக பக்குவமடைவார்கள்... மிகுந்த ஈடுபாடும், கடமையுணர்ச்சியும் தேவை."
"இப்பெண்ணின் அஸாத்ய புத்திக் கூர்மையை உணர்ந்த என்னுடைய மனைவியும் எங்களுடைய சம்பாஷணையில் கலந்து கொண்டாள். அதனால் அவள் என்னிடம், " நீங்கள் ஏன் வாஷிங்டன் போஸ்டிற்காக இப்பெண்ணை பேட்டி காணக் கூடாது? ஏன் பாரிஸ் ஹில்டன்களை மட்டுமே காண்கிறீர்கள்? என்று கேட்டாள். நானும் அப்பெண்ணிற்கு ஏதோ கடமைப் பட்டவனாக உணர்ந்தேன். எனவே அவளிடம், நேர்காணலுக்காக சிறிது நேரத்தை ஒதுக்க முடியுமா என்று கேட்டேன்...."
"முதலில் இதற்கு என்னுடைய முதலாளி அனுமதிக்க வேண்டும். தவிர, உங்களைப் போன்ற வாடிக்கையாளர்கள் பலருக்கும் என்னுடைய உதவி தேவைப்படும் எனக் கூறி அமைதியாக மறுத்தாள்."
"உன் பெயர்தான் என்ன?"
"கலைவாணி!!"
"அவளுடைய பணியின்பாற்பட்ட பக்தி மற்றும் ஈடுபாடு இவையனைத்தும் எனது மனைவியை அவளிடம் பெருமை கொள்ளச் செய்தது மட்டுமல்லாமல், நேரிடையாக அவளது முதலாளியிடமே செல்லச் செய்தது....சார், அந்தப் பெண் கலைவாணி...
"ஆமாம், கடின உழைப்பாளி"
"இவர் என்னுடைய கணவர் விஷ்வநாத்"
"உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"
"இவர் வாஷ்ங்டன் போஸ்டில் சீனியர் பத்திரிக்கையாளர்..."
"வாஷ்ங்டன் போஸ்ட்? என கடை உரிமையாளர் எழுந்து விட்டார்."
"ஆமாம், சார் நான் இந்தப் பெண்ணை பேட்டி காண விரும்புகிறேன்...இவளது புத்திக் கூர்மையும், பண்பும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது."
"கடை உரிமையாளர் அவளை அழைத்தார்....அப்போது நேரம் மாலை 5.45."
"கலைவாணி, இவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள். உன்னுடன் சிறிது நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்."
"சார், இது கூட்டமான நேரம், நிறைய வாடிக்கையாளர்கள் உதவிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களால் முடியுமானால் நாளை வரலாம்."
"ஓகே, ஓகே என்னால் நாளை வர முடியும்."
"மறுதினம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் எனக்கு இருந்த சில சந்திப்புகளை ஒத்தி வைத்து விட்டு இப்பெண்ணைப் பார்ப்பதற்கென்றே வந்தேன்."
"கலைவாணி ஆற்காடு அருகிலிருக்கும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண். அவளுடைய ஐந்து சகோதரிகளில் இவளே மூத்தவள். இவளுடைய தகப்பனோ பெரும் குடிகாரர். யாரைப் பற்றிய கவலையுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டிருக்கிறார். கட்டிட மேஸ்திரியிடம் உதவியாளாக வேலை செய்த இவரது தாயாரும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இந்த ஆறு பெண்களையும் தெருவில் நிர்க்கதியாக விட்டு இறந்துவிட்டார்."
"ஒன்பதாம் வகுப்பே முடித்திருந்த இப்பெண் தனது ஐந்து சகோதரிகளையும் உடனழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டார். இங்கு வந்து வேலை தேடிய இவருக்கு கிரி ட்ரேடிங் கம்பெனி உதவ முன்வந்திருக்கிறது. இவருடைய ஐந்து சகோதரிகளையும் தன்னுடைய சொற்ப வருவாயில் படிக்க வைக்கிறார். அவர்களனைவரும் அருகிலுள்ள கார்பரேஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்."
"கலைவாணி, தத்வ போதத்தைப் பற்றிப் படிக்கும் ஆர்வம் உனக்கு எப்பொழுது, எவ்வாறு ஏற்பட்டது?"
"இங்கு சேர்ந்த பிறகு, வாடிக்கையாளர்கள் விரும்பும் விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் அவர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் விவேகானந்தர் எழுதிய சிறிய புத்தகங்களை முதலில் வாசிக்கத் துவங்கினேன். அவை என்னை மிகவும் கவர்ந்த படியால், மேலும் தமிழிலுள்ள பகவத் கீதை, விவேக சூடாமணி போன்றவற்றையும் படித்தேன்...பிறகு இவ்வாறாக...
"உன்னுடைய சம்பளம் எவ்வளவு?"
"2500 ரூபாய்"
"இந்த சொற்ப வருவாய்க்குள் உன்னுடைய எல்லா தேவைகளையும் ஈடு செய்ய முடிகிறதா?"
"இல்லை சார். ஆனால் என்னுடைய முதலாளி எனக்கு நிறைய உதவுகிறார்."
"வாழ்க்கையில் உனது நோக்கம் என்ன?"
"என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் நல்ல கல்வியை அளிக்க வேண்டும். அப்போழுதுதான் அவர்களை நல்ல பணியில் அமர்த்த முடியும்."
"நான் உனக்கு மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் அளித்தால், உன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அது போதுமானதாக இருக்குமா?"
"அது சற்றே அதிகம்தான். ஆனால் நான் எதையுமே என்னுடைய முதலாளியின் வாயிலாகத்தான் ஏற்றுக் கொள்வேன்"
"எனவே நாங்கள் அவளை அவளது கடை உரிமையாளரிடம் அழைத்துச் சென்று, நாங்கள் மாதா மாதம் அவளது சகோதரிகளின் படிப்புச் செலவிற்காக பத்தாயிரம் ரூபாய் அளிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தோம்."
"அவள் அதற்குத் தகுதியானவள்தான். நீங்கள் என்னை நம்பி என்னிடம் மாதா மாதம் பணத்தை அனுப்பி வைக்கலாம்; நான் அதனை அவளிடம் சேர்ப்பிக்கிறேன். அல்லது நீங்கள் அவளது பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் துவக்கி அதற்கே அனுப்பி வைக்கலாம்" என்று யோசனை கூறினார்.
என்னுடைய நண்பர் ஜான் பால், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மண்டல மேலாளரும் என்னுடன் வந்திருந்தார். என்னுடைய இச்செயலுக்காக தன்னுடைய பாராட்டுதலைத் தெரிவித்தார். என்னுடைய மனைவி, " கலைவாணி வேத வேதாந்தங்களில் தேர்ச்சியுற்று அமெரிக்காவில் பல சொற்பொழிவுளை ஆற்ற வேணுமென்று கற்பகாம்பாளை வேண்டிக் கொள்கிறேன்" என்று கூறினார். மேலும் அத்தகைய சொற்பொழிவுகளுக்கும் நாங்களே ஏற்பாடும் செய்து தருவோம்.
"நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றோம். இன்னமும் பீஹார் மற்றும் பாரக்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் இது போன்று இன்னும் எத்தனை ரத்தினங்கள் கிடைக்குமோ?"
"நாங்கள் மிகவும் விநயமுடையவர்களானோம்."
ஆங்கில கட்டுரையை எனக்கு மெயிலில் அனுப்பிய சங்கருக்கும், அதை உடனே மொழிபெயர்த்த யதிராஜுக்கும் நன்றி.
நன்றி : www.idlyvadai.blogspot.com
No comments:
Post a Comment